Search

puja

Aug 3, 2026

உள்ளூர்

மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணி வெளியானது!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

​மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

​சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

​பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைதிகள் அழித்துள்ளமை தெரியவந்துள்ளது. 

​இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளிருந்து வெளிப்புறத்தை நோக்கிக் கற்களினால் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

​ அக்கல்தாக்குதல்கள் காரணமாகச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

​பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், 'சாத்தான்', 'அசார்', 'பட்டா' மற்றும் மற்றொரு கைதியும் இணைந்தே இந்த பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

​பதற்றநிலையின் போது வன்முறையில் ஈடுபட்ட கைதிகளை அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரைப் பூசா உள்ளிட்ட மேலும் 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யச் சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுத்தது. 

​சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்நாட்களில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்தப் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

​நான்கு கைதிகள் கூரை மீதேறி, சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும், அதன்போது சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் வருகை தந்து இது தொடர்பில் கைதிகளிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. 

​ஆனால், அங்கிருந்த கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை நோக்கிக் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

​அந்நேரத்தில் அதிகாரிகள் அவ்விடத்திலிருந்து வெளியேறியதுடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள மருந்துகள், சமையலறையிலுள்ள கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்திலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்களைப் பாதுகாப்பாக அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

​இதற்கிடையில், மேலும் சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியில் கட்டப்பட்டு வரும் மதிலை உடைத்துத் தப்பியோட முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியை முறியடிப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

​எவ்வாறாயினும், அந்நேரத்தில் மற்றொரு குழுவினர் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்குத் தீ வைத்துள்ளனர். 

​பின்னர் அவர்களிலுள்ள ஒரு குழுவினர், கைதிகளிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்படும் கட்டடத்தை உடைத்து, அங்கிருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

​இவ்வாறான பின்னணியில், மேலும் சில கைதிகள் ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குச் சென்று, அங்குள்ள பூட்டுகளை உடைத்து அவர்களும் அச்சிறைக் கூடங்களிலிருந்து வெளியே வருவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். 

​அவர்களில் ஒரு பகுதியினர் சிறைக் கூடங்களிலிருந்து வெளியே வந்தபோதிலும், மற்றொரு குழுவினர் அதனை மறுத்துத் தாம் தங்கியிருந்த சிறைக் கூடங்களிலேயே தங்கியிருந்துள்ளனர். 

​அந்தச் சந்தர்ப்பத்தில், பதற்றநிலையை வழிநடத்திய கைதிகள் வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All