
puja
Aug 3, 2026
உள்ளூர்
சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா கவனம்! கனமழை எச்சரிக்கை வெளியீடு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யும்.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு நிலவுகிறது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





