
Rebecca
Mar 1, 2026
உள்ளூர்
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 2ஆம் திகதி மாலை வரை இஸ்ரேலில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூதுவர் நிமல் பண்டார இது குறித்து மேலும் கூறுகையில்,
"நேற்று காலை ஈரானின் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு விக்டோரியன் விமான நிலையம் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதுடன், அங்கிருந்த அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இலங்கை நோக்கிப் பயணிக்கவிருந்த பலர் மீண்டும் இஸ்ரேலில் உள்ள தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோன்று, கொழும்பிலிருந்து இஸ்ரேல் வரவிருந்த பலர் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் வரை இலங்கையிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது."
"இஸ்ரேலில் மார்ச் மாதம் 2ஆம் திகதி மாலை வரை மூன்று நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் திறக்கப்படமாட்டாது. எனினும், அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இயங்கும். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலைமை இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம். இன்று காலை இப்பிராந்தியத்தில் இறுதியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானில் நிலவும் சூழலைப் பொறுத்து ஏவுகணைத் தாக்குதல்கள் குறைய வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






