
Rebecca
Feb 15, 2026
உள்ளூர்
இந்தியா-பாகிஸ்தான் போட்டி : விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (15) இரவு நடைபெறவுள்ள போட்டியினைப் பார்வையிட, முறையான அனுமதிப்பத்திரம் (நுழைவுச்சீட்டு) இல்லாத ரசிகர்கள் எவரும் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போட்டி தொடர்பான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ள போதிலும், பலர் இன்றைய தினத்தில் நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்காக மைதானத்திற்கு அருகில் வந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக, முறையான அனுமதிப்பத்திரம் இன்றி மைதானத்திற்கு அருகில் வந்து அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த,
"தயவுசெய்து, முறையான அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டால் வந்து அசௌகரியப்பட வேண்டாம். 4 வீதித் தடைகள் உள்ளன. 6 சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றினூடாக உள்நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது. QR குறியீட்டுடன் இது அவசியமானது. அவ்வாறு வர வேண்டாம். சில இடங்களில் நாம் அகண்ட திரைகளை அமைத்து தேவையான வசதிகளைச் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, தடைசெய்யப்பட்ட பொருட்களை மைதானத்திற்கு கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார், குறிப்பாக விளையாட்டு மைதானத்தை நோக்கி எறியக்கூடிய மரத்துண்டுகள், கொடிகள், பந்துகள் அல்லது மட்டைகள், நீர் அல்லது பானப் போத்தல்கள், தீப்பெட்டி அல்லது லைட்டர்கள் போன்றவற்றுடன் பெரிய பைகளையும் (Backpacks) கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், போட்டி நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் மைதானத்தை விட்டு வெளியேறுமாறும் பொலிஸார் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கைச் சூழ இன்று பிற்பகல் 3.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், போட்டியைப் பார்வையிட வரும் வாகனங்களுக்காக 7 வாகன தரிப்பிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதோடு, பிரிட்டோ புள்ள சந்தியில் (Brito Pulla Junction) முறையான வாகன தரிப்பிடங்கள் இல்லாத போதிலும், அங்கு 400 வாகனங்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 400 வாகன இடங்களும் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்தவர்களுக்காகவே ஒதுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த எல்லை மீறப்பட்டதும் வாகனங்கள் ஆத்தர் சில்வா மாவத்தை (Arthur Silva Mawatha) மற்றும் கிராண்ட்பாஸ் (Grandpass) பகுதிகளுக்குத் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் போட்டி தொடர்பில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உட்பட சுமார் 5,000 பொலிஸ் அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் அவர்கள் பயணிக்கும் வீதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7.00 மணிக்கு போட்டியை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கடமைகளுக்காக 350 அதிகாரிகளும், விசேட பொலிஸ் படையணியின் 300 அதிகாரிகளும், பொலிஸாரில் 2,800 பேரும் மற்றும் பெருமளவிலான புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மேலும் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






