Search

janani

Jun 8, 2026

உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவுப் பகுதிக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த அதிர்வு 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், பின்னர் அதன் அளவு திருத்தப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் (PHIVOLCS), 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இதை பதிவு செய்துள்ளதுடன், ஒரு மீற்றருக்கு மேல் உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், அவை பல மணிநேரங்கள் தொடரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அதேவேளை, இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை 7.7 ரிக்டர் அளவாக மதிப்பிட்டுள்ளது.

இதுவரை பெரிய அளவிலான சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், பலத்த அதிர்வினால் சில பகுதிகளில் மக்கள் பதற்றமடைந்து வெளியேறியதுடன், சிலர் மயக்கமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், அவசர அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All