
admin
Jul 6, 2026
Breaking
சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) காலை பெரும் வன்முறையாக உருவெடுத்ததில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் சீர்குலைந்து, கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மதியம் 1 மணியளவில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் முறுகல் நிலையே இந்தத் தொடர் வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்துள்ளது.
விளக்கமறியல் கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல், சுமார் 1,800 கைதிகள் உள்ள சிறைச்சாலையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய மோதலில் 2 உயிரிழப்புகளும் 34 காயங்களும் பதிவாகியிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு முழுமையாகப் பலப்படுத்தப்பட்டு, நிலைமை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வன்முறையின் தாக்கம் காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





