
admin
Jul 19, 2026
உள்ளூர்
கிரிபத்கொட மற்றும் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்புக்கு போலீசார் அதிரடி!

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்பிடிகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (18) இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 06 கிலோ 96 கிராம் ஐஸ் போதைப்பொருள், 02 கிலோ 70 கிராம் ஹெரோயின் மற்றும் 5,000 போதை மாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திக்பிடிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மின்னணு தராசு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காகவும், கடத்துவதற்காகவும் இந்த போதைப்பொருள் தொகுதி கொண்டு வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் (19) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






