Search

sath

Mar 31, 2026

Breaking

சமய நிகழ்வுகளுக்கு மின்சார தடைகள் இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


எரிசக்தி முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதன் ஒரு கட்டமாக புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அரச நிறுவனங்களுக்கு எரிசக்தி சேமிப்பு தொடர்பான விசேட வழிகாட்டல்களை வெளியிட்டுள்ள பின்னணியில், எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்கான மின்சாரப் பயன்பாடு குறித்து அமைச்சர் கருத்து வெளியிட்டார்.


மக்களின் வாழ்க்கையை இயன்றவரை பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன்  பண்டிகைகளுக்காக மின்சாரக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படமாட்டாது எனவும், அந்த விழாக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அமைச்சர் மேலும் கூறுகையில்:


"மக்களின் அன்றாட வாழ்க்கை என்பது பொருளாதார நடவடிக்கைகள் மட்டுமல்ல; மக்களின் கலாசார, அழகியல் மற்றும் சமூக வாழ்க்கையை நாம் இயன்றவரை பாதுகாக்க வேண்டும். எனவே, எதிர்வரும் ​வெசாக், பொசன், எசல மற்றும் ஏனைய சமய விழாக்களின் கொண்டாட்டங்களைக் குறைக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் எமக்கு இல்லை. அவற்றுக்குத் தேவையான அரச அனுசரணை எமது தரப்பிலிருந்து வழங்கப்படும். ஆனால், உலகளாவிய நிலையை கருத்திற்கொண்டு, எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் விழிப்புணர்வுடனான நுகர்வு என்ற கருப்பொருளின் கீழ் அனைவரும் செயற்படுவார்கள் என நாம் கருதுகிறோம். எனவே, அத்தகைய விழாக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை."

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All