
admin
Jul 18, 2026
உள்ளூர்
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.
இதேவேளை, தரமற்ற நிலக்கரி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தன.
ஏப்ரல் 10ஆம் திகதி அது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதற்கமைய அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
அங்கு குறித்த பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் கிடைத்தன.
மேலும், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தன.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் குழந்தைகளின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் தொடர்பான பல தவறுகள் காணப்படுவதன் காரணமாகவும், அது குறித்து முறையாகச் செயற்படாததன் காரணமாகவும் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக கடந்த ஜனவரி 07ஆம் திகதி எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






