
puja
Aug 2, 2026
உள்ளூர்
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.
இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.
கைதிகளால் சிறைச்சாலையின் தலைமை சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகத்திற்கும் ஒழுக்கவியல் பிரிவிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், நேற்று பிற்பகல் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு சென்ற போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலையினுள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது.
எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அச்சந்தர்ப்பத்தில் கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அமைதியைப் பேணும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டதுடன், இதற்கமைய 246/கெந்தலியத்தபாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்தபாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, பதற்றநிலை நிலவிய மஹர சிறைச்சாலையின் சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் நேற்று இரவு மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், பதற்றநிலையினால் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி மஹர சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிறைச்சாலையினுள் தீவைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அந்நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





