Search

Rebecca

Jan 13, 2026

உலகம்

ஈரான் வன்முறை பலி எண்ணிக்கை 646 ஆக அதிகரிப்பு

ஈரான் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலி எண்ணிக்கை 646 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா, துருக்கி வழியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரானில் தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லை.

இந்த சூழலில், அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா, துருக்கி வழியாக வெளியேறுங்கள் என அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் வன்முறையும் காயமும் ஏற்படக்கூடும். அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மூடல்கள், பொது போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஈரான் அரசு மொபைல், லேண்ட்லைன் மற்றும் தேசிய இணைய நெட்வொர்க்குகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளது.

விமான நிறுவனங்கள் ஈரானுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் தொடர்கின்றன, பல விமான சேவைகள் ஜனவரி 16ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா, துருக்கி வழியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All