Search

janani

May 9, 2026

உள்ளூர்

நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை தீர்க்க உடனடி செயல் திட்டம்!

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து அவதானம் செலுத்தி திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாமல் போவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய குடிநீர், சமூக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத் திட்டங்களின் தற்போதைய நிலைமை, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளுடன் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவை ஆரம்பிக்கப்படக்கூடிய திகதி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை நிறைவடையும் திகதி குறித்த அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன்போது எக்காரணம் கொண்டும் நிதிப் பிரச்சினையை ஒரு தடையாகக் கருத வேண்டாம் எனவும், திட்டங்களைத் தயாரித்து அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது வெளிநாட்டுப் கடன்களுக்காகக் காத்திருக்காமல், முடிந்தவரை உள்நாட்டு நிதியைக் கொண்டு அவற்றை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, திட்டங்களைத் தயாரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணியமர்த்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், மூலதனச் செலவினங்களாக ஒதுக்கப்படும் நிதியை அந்த ஆண்டிலேயே உரிய திட்டங்களுக்காகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவ்வாறு செய்யத் தவறினால் திட்டங்களுக்காக மேலதிக செலவுகளைச் சுமக்க நேரிடுதல், செலவிடப்படும் நிதிக்கான பலன்கள் கிடைக்காமல் போதல் மற்றும் அத்திட்டத்திற்காக அடுத்த ஆண்டிலும் மூலதன ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டியிருத்தல் போன்ற பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, கண்டி, கம்பளை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றைச் செயற்படுத்தும்போது எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி இங்கு தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

கொழும்பு மாவட்டத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், மக்களுக்குப் போதுமான அளவு நீர் கிடைக்காத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் இங்கு விளக்கமளித்ததுடன், அந்த செயற்பாடுகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவை சிறந்த ஒருங்கிணைப்புடனும் திட்டமிடலுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்குமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீ ஓயா (Wee Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை அடுத்த ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

வடமத்திய மக எல மற்றும் வடமேல் கால்வாய் திட்டங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், வெலிகந்த, மெதிரிகிரிய மற்றும் லங்காபுர பகுதி மக்கள் எதிர்நோக்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வுகாண்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதுடன், இதன்போது, அதிக செலவு ஏற்படாத திட்டங்களை உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி விரைவாக நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அத்தியாவசிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட காரணத்தால் சில திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்ட போதிலும், அனைத்து திட்டங்களும் மக்களின் தேவைகளை இனங்கண்டு செயல்படுத்தப்படுபவை என்பதால், அவற்றை மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறைப்படியும் முன்னெடுத்து அதன் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ,

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுதுலால், தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்சன், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.பி.சி.பி. பண்டார, நீர்வளச் சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All