Search

sath

Mar 10, 2026

உலகம்

ஈரானிய வீராங்கனைகளுக்கு மனிதாபிமான புகலிடம்

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. 

தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர். 

அவுஸ்திரேலியப் பிரதமர் எண்டனி எல்பானீஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஆசியக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரான் மகளிர் அணி, தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்த்தது. 

இது ஈரான் அரசுக்கு ஆதரவான ஊடகங்களால் "அவமரியாதையான செயல்" என விமர்சிக்கப்பட்ட நிலையில், வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கவனம் திரும்பியது. 

அவுஸ்திரேலியாவினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட வீராங்கனைகள்: 

சாரா சர்பாலி அலிஷா (Zahra Sarbali Alishah) 

மோனா ஹமூதி (Mona Hamoudi) 

சாரா கன்பாரி (Zahra Ghanbari) 

பாத்திமா பசந்திதே (Fatemeh Pasandideh) 

அத்தேபே ரமசானிசாதே (Atefeh Ramezanizadeh) 

இந்த வீராங்கனைகள் மீண்டும் ஈரானுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர், அவுஸ்திரேலியா இந்த "உணர்திறன் மிக்க சூழலை" மிகச் சிறப்பாகக் கையாளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த துணிச்சலான பெண்களின் நிலை குறித்து அவுஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் பிரதமர் எல்பானீஸ் தெரிவித்துள்ளார். 

அணியின் ஏனைய வீராங்கனைகளுக்கும் அவுஸ்திரேலியாவின் ஆதரவு திறந்த நிலையில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் காரணமாக சில வீராங்கனைகள் மீண்டும் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பிலிப்பைன்ஸிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிய ஈரான் அணியின் ஏனைய உறுப்பினர்கள் டுபாய் ஊடாக நாடு திரும்ப முயன்ற போதிலும், ஐக்கிய அரபு இராச்சியம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது. 

அதன்படி அவர்கள் துருக்கி அல்லது மலேசியா ஊடாக மீண்டும் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. 

ஐந்து வீராங்கனைகளுக்குப் புகலிடம் அளித்தது சாதகமான நடவடிக்கை என்றாலும், எஞ்சிய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் பலத்த சந்தேகம் நிலவுவதாக உலகளாவிய வீரர்கள் சங்கமான FIFPRO தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All