Search

janani

Apr 8, 2026

உள்ளூர்

நாட்டில் தமிழர்களுக்கு பெரும் அநீதி - பொங்கி எழுந்த சாணக்கியன்

இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் என்பது பௌத்தர்களுக்கு மட்டுமேயான ஒரு நிறுவனம் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நிலையியற்கட்டளை 27/2-இன் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலப்பரப்புக்குள் ஒரு வாழைமரம் கூட நட தொல்பொருள் திணைக்களம் அனுமதிப்பதில்லை. ஆனால், ஆலயத்திற்கு வெளியே 58 சட்டவிரோத கடைகள் பெரும்பாலும் பெரும்பான்மைச் சமூகத்தினரால் நடத்தப்படுகின்றன. அவற்றுக்குத் திணைக்களம் அனுமதி வழங்குகிறது. ஆலயத்திற்கு ஒரு சட்டம், ஏனையோருக்கு ஒரு சட்டமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தில் மின்சார மீற்றர் பெட்டி எரிந்த நிலையில், புதிய பெட்டியைப் பொருத்தத் தொல்பொருள் திணைக்களம் முட்டுக்கட்டை போடுகிறது. ஆலயக் கட்டடத்தைச் சேதப்படுத்தும் அரச மரத்தை அகற்றவும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், அதே மாவட்டத்தில் கிரான் பகுதியில் தொல்பொருள் அடையாளங்கள் உள்ள இடத்தில் புதிய விகாரை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் இரண்டு விதமான சட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் சாடினார்.

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் 500-க்கும் குறைவான பெரும்பான்மையின குடும்பங்களே வாழ்கின்றனர். ஆனால், அங்கு புதிதாக 38 பௌத்த விகாரைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 10 குடும்பங்களுக்கு ஒரு விகாரை என்ற அடிப்படையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தமிழ் மக்களின் இனப்பரம்பலைச் சிதைக்கும் முயற்சி என அவர் குற்றம் சுமத்தினார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் தமிழ் கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபடக் கூடத் தடையுள்ளது. அதேபோல் வெடுக்குநாறிமலையிலும் வழிபாட்டுச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரையைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் மயிலிட்டி பலாலி பிரதேசத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் பாரபட்சமான போக்கைக் காட்டுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All