Search

admin

Jan 24, 2026

உள்ளூர்

மேலும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய பிரதான வைத்தியசாலைகள் மற்றும் உப பிரதான வைத்தியசாலைகள் உட்பட அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சஞ்சய தென்னக்கோன் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், மனிதாபிமான அடிப்படையில் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு, புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான வைத்தியசாலைகளில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படாது எனச் சுட்டிக்காட்டிய அவர், அவசர சிகிச்சை சேவைகளையும் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். 

அத்துடன், இந்த பணிப்புறக்கணிப்பு திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல எனவும் சுட்டிக்காட்டிய விசேட வைத்தியர், வைத்தியர்களுக்கு எழுந்துள்ள இந்த பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடன் கலந்துரையாடியதாகவும், சில சந்தர்ப்பங்களில் இந்த கலந்துரையாடல்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சஞ்சய தென்னக்கோன், நாங்கள் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தோம். இதனை 48 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதாவது இன்னும் 24 மணித்தியாலங்களுக்கு இதனைத் தொடர்ந்து முன்னெடுப்போம். 

பிரதான வைத்தியசாலைகள், உப பிரதான வைத்தியசாலைகள் அனைத்தும் இதில் இணைந்துள்ளன. ஆனால் சிறுவர் நோய், மகப்பேறு, புற்றுநோய், சிறுநீரக நோய் தொடர்பான வைத்தியசாலைகளை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் இதில் இணைத்துக்கொள்ளவில்லை. 

பணிப்புறக்கணிப்பு என்று கூறினாலும் இது திடீரென ஏற்பட்ட நிலைமை அல்ல. நாம் நீண்ட காலமாக எமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அவ்வளவு விருப்பத்துடன் இந்தக் கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை. 

சில நேரங்களில் எமக்கு கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கவுமில்லை. இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் எம்முடன் சுமூகமான கலந்துரையாடலை வழங்கியிருந்தால் எமக்கு பணிப்புறக்கணிப்புக்குச் செல்ல வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் அரசாங்கம் இப்பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் மூடிய கொள்கையையே பின்பற்றியது. 

இந்தப் பிரச்சினைகள் தொடர்பான சில விடயங்களை திரிபுபடுத்தி சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்திலும் கருத்துத் தெரிவித்து உண்மையை முற்றாகத் திரிபுபடுத்தியுள்ளார். ஏனெனில் நாங்கள் அவருடன் கலந்துரையாட அதிகபட்சம் சந்தர்ப்பம் கோரிய போதிலும், அதற்காக எமக்கு மிகக் குறைந்தளவிலேயே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

இதில் அரச வைத்தியசாலைகளில் சாதாரண நடவடிக்கைகளே முடங்கியுள்ளன. ஆனால் அவசர சிகிச்சை சேவைகள் எவ்வித குறைபாடும் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன. 

ஏதேனும் ஒரு நோயாளி வந்தால் நாங்கள் தயக்கமின்றி அந்தச் சிகிச்சைகளை மேற்கொள்வோம். யாராவது தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்றோ, தனது உடல்நிலை சரியில்லை என்றோ நினைத்தால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்க முடியும். நாம் அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All