
admin
May 29, 2026
உள்ளூர்
எரிபொருள் விலை நிலவரம்: செப்டம்பர் வரை விலை குறையாது!

நாட்டின் எரிபொருள் விலையுடன் தொடர்புடைய சர்வதேச எரிபொருள் விலை இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை எதிர்காலத்தில் பெருமளவில் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ எரிபொருள் விலை குறையாது என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஜூலை மாதம் இறுதி வரை தேவையான இருப்புக்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை குறைப்பு ஏற்படாது என்பதை தெளிவாகக் கூற முடியும். பெரும்பாலும் செப்டம்பர் மாதம் வரை விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விலை அதிகரிப்பு உள்ளதா என்பதை இந்த நேரத்தில் எங்களால் கூற முடியாது. நாம் அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மாலையிலேயே உலக சந்தை விலை அறிவிக்கப்படும். அந்த விலையையும் பார்த்து, பொதுவாக 31 ஆம் திகதியே விலை அறிவிக்கப்படும். இந்த முறை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்றைய நாளுக்குரிய உலக சந்தை எண்ணெய் விலை இன்று மாலையாகும்போது வெளியிடப்படும்.இவை அனைத்தையும் பரிசீலித்து அது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும்.
ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு சிறப்பு கலந்துரையாடலும் ஆரம்பிக்கப்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். தெளிவாக விலை குறைப்பு எதுவும் ஏற்படாது.
சில நேரங்களில் இந்த விலையிலேயே நீடிக்குமா அல்லது சிறியளவில் அதிகரிப்பு ஏற்படுமா என்பது குறித்தே ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தெளிவாக பெரியளவிலான விலை அதிகரிப்பு எதுவும் ஏற்படாது. எனவே, அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை
ஏனெனில் பொதுவாக நான்காவது மாதத்தில் உலக சந்தையில் ஒரு கொள்கலன் டீசல் 290 என்ற மட்டத்தில் இருந்தது. தற்போது அது 140, 150 என்ற அளவில் உள்ளது.ஆனால் அது யுத்தத்திற்கு முன்னர் 80, 90 என்ற அளவிலேயே இருந்தது. விலை குறைவடைந்துள்ளது. ஆனால் அந்த விலை வீழ்ச்சியானது, யுத்தத்திற்கு முன்னர் இருந்த மட்டத்திற்கு இன்னும் குறையவில்லை.
தற்போது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏழாவது மாத இறுதி வரை எங்களிடம் உள்ளது. அதேபோல் மசகு எண்ணெய் கப்பல்களும் வந்துகொண்டிருக்கின்றன.
ஒரு சாதாரண மசகு எண்ணெய் கப்பல் மூலம் டீசலை எடுத்துக்கொண்டால், சுமார் 20 நாட்களுக்குத் தேவையான டீசல் அளவை அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில் ஏழாவது மாத இறுதி வரை தேவையான இருப்புக்கள் எங்களிடம் உள்ளன என்று கூறலாம். எஞ்சிய எண்ணெய் அளவு, அதாவது எட்டாவதுமற்றும் ஒன்பதாவது மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இதுவரை இலங்கையை வந்தடையாவிட்டாலும், அவை தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சில ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கைக்குள் உள்ள இருப்புக்கள் ஏழாவது மாத இறுதி வரை மட்டுமே இருப்பதாக எங்களால் கூற முடியும்."என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






