
admin
Jul 1, 2026
உள்ளூர்
எரிபொருள் விலை மாற்றம் எதிரொலி... பேருந்து கட்டணம் திருத்தம்!

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள பேருந்து கட்டணக் கொள்கையின்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி பேருந்து கட்டண திருத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலையில் தொடர்ந்து ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய இயக்கச் செலவுகள், தற்போது பயன்படுத்தப்படும் பேருந்து மாதிரிகள், அமெரிக்க டொலரின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பேருந்து உதிரிப் பாகங்களின் விலைகளில் ஏற்படும் தாக்கம், அதிவேக வீதிகளில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த தள அமைப்பைக் கொண்ட மெட்ரோ பேருந்துகள் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.
அதேநேரம் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்குவதையும் பேருந்து கைத்தொழிலின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள பேருந்து கட்டண சூத்திரம் மற்றும் கட்டணக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கும் திருத்துவதற்குமான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, ஜூன் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தத்தையும் கருத்திற் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, அதிவேக வீதிகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






