Search

admin

Apr 24, 2026

உலகம்

16 ஆயிரம் ஆண்டுகளாக வடகடல் அடியில் மறைந்த காடு : அதிர்ச்சி கண்டுபிடிப்பு

ஐரோப்பாவையும் பிரிட்டனையும் இணைக்கும் வடகடல் (North Sea) பகுதிக்கு அடியில், சுமார் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

டோகர்லாந்து' (Doggerland) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில், சுமார் 16,000 ஆண்டுகளுக்கு முன்பே ஓக் (Oak) மற்றும் எல்ம் (Elm) போன்ற வலிமையான மரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததை வார்விக் பல்கலைக்கழக (University of Warwick) விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சாதாரணமாக மரங்கள் புதைபடிவமாக மாறுவது அரிது. ஆனால், கடற்பரப்பிற்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண்ணில் தங்கியிருந்த மரபணுக்களை (sedaDNA) ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த மர்மம் விலகியுள்ளது.

சுமார் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட சில விசித்திரமான மரங்களின் டிஎன்ஏ எச்சங்களும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. இது விஞ்ஞானிகளையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பனிக்காலத்தின் முடிவில் கடல் மட்டம் உயர்ந்தபோது, இந்த அடர்ந்த காடுகளும் அங்கே வாழ்ந்த உயிரினங்களும் அப்படியே கடலுக்குள் மூழ்கியுள்ளன. இது வெறும் ஒரு நிலப்பாலம் மட்டுமல்ல, ஒரு காலத்தின் நாகரிக மையமாகவே இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் மீள் உருவாக்கம் செய்து பார்த்தபோது, அங்கு ஆறுகள், ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

பூமியின் காலநிலை மாற்றங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இந்த 'டோகர்லாந்து' ஒரு சான்றாகும். கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் இதுபோன்ற இன்னும் பல மர்மங்கள் எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All