Search

admin

May 21, 2026

உள்ளூர்

மாணவர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பில் கவனம்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson) அவர்களைச் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 

இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது. 

அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி; மாணவர் பரிமாற்றம் (Student mobility), கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது. 

செவ்னிங் புலமைப்பரிசில்கள் (Chevening Scholarships) மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம் (Commonwealth Scholarship Scheme) போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் இருந்துவருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால மக்கள் தொடர்புகளை வளர்ப்பதற்கும் கிடைக்கப்பெறுகின்ற பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார். 

முறையான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் உயர்கல்வித் துறையைப் பலப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது விளக்கிக்கூறினார். கல்வியின் தரத்தைப் பேணுதல் மற்றும் மாணவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்தல் பற்றிய ஐக்கிய இராச்சியத்தின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே கல்விசார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பொதுவான உடன்பாடுகளுடன் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. 

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All