Search

Rebecca

Feb 3, 2026

உள்ளூர்

கிவுல் ஓயாவுக்கு குடிநீர்..! ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு இல்லை..! அரசின் நோக்கம் தான் என்ன?

கிவுல் ஓயாவுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கிய இவ் அரசாங்கத்திற்கு ஏன் மட்டக்களப்பில் இருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க நிதியினை ஒதுக்க முடியாதுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வவுணத்தீவு பகுதியில் அமைந்துள்ள பனை அறுப்பன், பான் சேனை, வடக்கல் மாது, பாவட்கொடி சேனை, உன்னிச்சை மற்றும் நெடியமடு ஆகிய கிராமங்களுக்கு இதுவரை குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உன்னிச்சை பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், அதே பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாத நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்க அரசால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவை நடைமுறைக்கு வரும் காலக்கெடு குறித்து அமைச்சரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

உன்னிச்சை பிரதேசத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த அதே வேளை குடிநீர் வழங்கப்பட்ட இணைப்புக்களின் எண்ணிக்கை 217 எனக் குறிப்பிடுகின்றார் அமைச்சர் அவர்கள்.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உன்னிச்சை, பனையறுப்பான், வாதாகல்மடு, பன்சேனை, பாவற்கொடிச்சேனை, நெடியமடு, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இவ் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இரண்டு வரவுசெலவுத் திட்டங்களிலும் எவ்வித முன்மொழிவும் மொழியப்படவில்லை.

ஆனால் மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட பெரும்பான்மை சமூகத்திற்கு குடிநீர் வழங்க 23,000 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்களுக்கு குடிநீர் வழங்க உங்களிடம் பணம் உண்டு; ஆனால் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க உங்களிடம் பணமில்லை. இது எவ்விதத்தில் நியாயம்? என்று கூறுங்கள். 10,000 பேருக்கு குடிநீர் வழங்க நீங்கள் ஒதுக்கியுள்ள 23,000 மில்லியன் ரூபாயில் 10 சதவீதமான நிதி எம் மக்களுக்கு குடிநீர் வழங்க போதுமானது.

குடிநீர் என்பது மனிதனுடைய அடிப்படைத் தேவை. ஏறாவூர்பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று போன்ற இடங்களுக்கும் குடிநீர் வசதிகளை வழங்க எந்த திட்டங்களும் முன்மொழியப்படவில்லை. உயரமான பிரதேசங்களுக்கு ஊழஅஅரnவைல றுயவநச ளுரிpடல ளுநசஎiஉந ஒன்றினை செய்து அவற்றை பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

23,000 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்திலே கிவுல் ஓயாவிற்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கிய இவ் அரசாங்கத்திற்கு ஏன் மட்டக்களப்பில் இருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க நிதியினை ஒதுக்க முடியாதுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All