
Rebecca
Jan 4, 2026
Breaking
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜே.வி.பி அறிக்கை

அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய சுதந்திர, இறைமையுள்ள நாடுகளைப் போலவே வெனிசுலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது எனவும், அதனை மீறுவதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை இல்லை எனவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை.
நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






