Search

sath

Feb 11, 2026

Breaking

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. 

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் அனைவரும் இன்று கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன்போதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வாசித்தனர். 

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதன் தீர்ப்பு இன்றைய தினத்திற்கு (11) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All