2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ☀️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்2
அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதேபோல், சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தவும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்கள் இருவரும் நேற்று முன்தினம் (16) பிற்பகல் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘கரந்தெனிய சுத்தாவின் ஆலோசனையின் பேரில் டுபாய் நிபுண மற்றும் மல்வானை டுடூ ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

அதில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர், தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை எடுத்து வந்து துப்பாக்கிதாரிகள் இருந்த காரில் கொடுப்பது பதிவாகியுள்ளது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஹோக்கந்தர திசையை நோக்கிச் செல்வதும் அதில் காணப்படுகிறது.

அந்த நேரத்தில் குறித்த சட்டத்தரணியும் அந்தப் பாதை வழியாக வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அது குறித்துத் துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம, அக்குரேகொடவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி வாகன தரிப்பிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகப் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனையின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.