2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தமிழ் மக்களின் காணியை கோரிய விமானப்படை!

உள்ளூர்August 30, 2025 · 12 months முன்0
தமிழ் மக்களின் காணியை கோரிய விமானப்படை!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விமானப்படையினரின் இக்கோரிக்கைக்கு தமது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார்.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்கப்படுவதில்லை என 29.08.2025 இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி விடுவிப்புச்செய்யப்பட்டநிலையில், அக்காணியில் மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தக்காணியினை விமானப்படை தமக்குத்தருமாறு மீண்டும் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

அத்தோடு இன்னும் 190ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர்.

இவ்வாறிருக்க மீண்டும் விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை கோருவது வேடிக்கையாகவுள்ளது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்து கொண்டு விமானப்படையினர் யாருடன் யுத்தம் செய்யப்போகின்றனர்.

எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இதன்போது தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.