2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

உள்ளூர்February 2, 2026 · 7 months முன்2
அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைத்து துண்டுகளை வழங்குவதை நிறுத்துதல்.

வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைப்பதைத் தடுத்தல்.

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் தன்னார்வமாகப் பங்கேற்பதில் இருந்து விலகுதல்.

தேவையான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இன்றி, வைத்தியசாலை கட்டமைப்பில் புதிதாகத் திறக்கப்படும் நோயாளர் விடுதிகள் மற்றும் அலகுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதைத் தடுத்தல்.

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பேணத் தேவையான போதிய வசதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றி நோயாளர்களைப் பரிசோதிப்பதில் இருந்து விலகுதல்.

நிபுணத்துவ வைத்தியர்கள் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் மாத்திரம் சேவையாற்றுவதுடன், நிபுணத்துவ வைத்தியர்கள் இல்லாத ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதில் இருந்து விலகுதல்.

போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, சுகாதார அமைச்சருக்கு தீர்வுகளை முன்வைக்க 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து சாதகமான பதில் எவையும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி கூடிய சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில், இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை தீவிரப்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.