2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

மீள்கட்டியெழுப்பல் பயணத்தில் 2026: ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து.

உள்ளூர்January 1, 2026 · 8 months முன்1

மிகப்பெரிய மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டியெழுப்பல் என்ற பாரிய பொறுப்பைச் சுமந்த நிலையிலேயே 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பல சவால்கள் மத்தியில் கடந்த 2025 ஆம் ஆண்டு, தேசிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்கான உறுதியான அடித்தளங்கள் அமைக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்த வரவு–செலவுத் திட்ட பற்றாக்குறை பதிவானது, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அரச வருவாய் ஈட்டப்பட்டது, நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக முதன்மை கணக்கு மிகை பெறப்பட்டது, ஏற்றுமதி வருவாய் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது, அரச வருவாய் இலக்குகளை மீறிய ஒரே ஆண்டாக 2025 பதிவு செய்யப்பட்டது மற்றும் அண்மைக்காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த ஆண்டாக அமைந்தது போன்றவை முக்கிய பொருளாதார சாதனைகளாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்துக்கு மாற்றாக, மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுத் திட்டம் போன்ற முயற்சிகள் 2025 ஆம் ஆண்டை அரசியல் மற்றும் சமூக மாற்றத்தின் திருப்புமுனை ஆண்டாக மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவை மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொண்ட விதம், இலங்கை மக்களின் மனிதநேயமும் ஒற்றுமையும் எந்த நெருக்கடியாலும் அழிக்க முடியாதது என்பதை மீண்டும் நிரூபித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் ஆதரவளித்த வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நட்பு நாடுகள், அயராது பணியாற்றிய பொலிஸார், முப்படைகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த நாடுகளை மீண்டும் எழுப்பியதில், அந்த மக்களின் தைரியமும் இலட்சியமும் முக்கிய பங்காற்றியதை நினைவூட்டிய ஜனாதிபதி, இலங்கை மக்களின் உறுதியான மனப்பாங்கின் பலத்தால் முன்பைவிட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

புத்தாண்டு என்பது கடந்த அனுபவங்களை சிந்திக்கவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிடவும் கிடைக்கும் ஒரு புதிய வாய்ப்பாகும் என்றும், நாட்டை மீள்கட்டியெழுப்பும் பயணத்தில் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய அனைவரையும் அவர் அழைப்பு விடுத்தார்.

மலர்ந்த 2026 புத்தாண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.