அபுதாபியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!

போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை உடතையில் வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் மேலதிக விசாரணைகளுக்காக அவசியமாக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் செப்டம்பர் 03 ஆம் திகதி அபுதாபி நகரிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்திய ட்ரோன்கள் (Drons) மற்றும் ஏவுகணைகள் மற்றும் அவை இலக்குகள் மீது மோதி வெடிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களை தங்களது கையடக்கத் தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்த போது, அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறைத்திலடைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு இலங்கைக்கு வெளியேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
அசோகபுர துன்கன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சேலாகே பந்துல திசாநாயக்க என்ற 37 வயதுடைய குறித்த நபர், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை உடமையில் வைத்திருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராவார்.
மற்றைய நபர் ‘பரேவி சுதா’வின் மிக நெருங்கிய பின்தொடர்பாளரும், பூஸா சிறைச்சாலைக்குள் குழப்பமான முறையில் நடந்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடையவருமான கொழும்பு பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சியம்பலாதுவ பத்திரணலாகே ஹர்ஷ குமார என்பவராவார்.
இவர்கள் இருவரும் செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 10.15 மணிக்கு அபுதாபி நகரிலிருந்து எதிஹாட் விமானச் சேவைக்கு சொந்தமான EY-392 இலக்க விமானம் மூலம் இலங்கைக்கு வெளியேற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும், ஹர்ஷ குமார கொழும்பு தெற்கு வட்டாரக் குற்ற விசாரணைப் பிரிவுக்கும் மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.




