வட, தென் அமெரிக்காவில் தெளிவாகத் தெரியும் சந்திர கிரகணம்!

எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.
அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது.
இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.
சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும்.
ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும்.
வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.
ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.
சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும்.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது.
இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும்.
இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.




