மீண்டும் திறக்கப்படும் கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!

டெங்கு அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம், அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்த நிலையில் இன்று (13) முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தைத் திறப்பதற்கு முன்னதாக, ஜனாதிபதி செயலகத்தின் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் நேற்று நாள் முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சுத்திகரிப்புப் பணிகளில் கொழும்பு மாநகரசபையின் பொரளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் இணைந்து நுளம்பு ஒழிப்பு மற்றும் புகை விசிறுதல் பணிகளை மேற்கொண்டனர். வளாகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.




