நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்: விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே நேற்று (05) மதியம் 1.00 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 34 கைதிகள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கூரை இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கைதிகள் குறித்து கருத்து தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகக் கூறினார்.