2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இரணைப்பாலையில் நவீன பனிக்கட்டி நிலையம் திறப்பு!

உள்ளூர்June 19, 2026 · 2 months முன்3
இரணைப்பாலையில் நவீன பனிக்கட்டி நிலையம் திறப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை கிராமிய கடற்றொழில் அமைப்பிற்காக நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மீனவர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மூலம் மீனவர்கள் தங்களது மீன்பிடி உற்பத்திகளை தரமான முறையில் பாதுகாத்து சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு செயல்பட்ட சூழ்நிலைகள் இருந்தன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்காது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தில் பரவலாக காணப்பட்ட போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் கணிசமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாக தெரிவித்த அவர், அவற்றை கட்டம் கட்டமாக தீர்த்து வைப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

“மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும், அவர்களின் தொழிலை நவீனமயப்படுத்துவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியாது. எனினும், அரசாங்கம் என்ற பொறுப்புடன் அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு கட்டம் கட்டமாக தீர்த்து வைக்க உறுதியாக செயற்பட்டு வருகின்றோம்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம், இரணைப்பாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடற்றொழில் துறையின் உற்பத்தித் திறன் மற்றும் வருமான உயர்விற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.