Rizi
Oct 3, 2025
உலகம்
தேவாலயத்தில் மரச் சாரம் இடிந்து விழுந்து 36 பேர் பலி : 200 பேர் படுகாயம்
கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் மத நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரச் சாரம் திடீரென இடிந்து விழுந்ததில், 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்ஹாரா பிராந்தியத்தின் அரெர்டி நகரில், புகழ்பெற்ற மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் தேவாலயம் அமைந்துள்ளது.இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மத நிகழ்வு, நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

தேவாலய வளாகத்தில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மரத்தினால் அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் அந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இத்தகைய விபத்துக்கள் எத்தியோப்பியாவில் அடிக்கடி நிகழ்வதாகக் கூறப்படும் நிலையில், இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All