
Rebecca
Jan 15, 2026
உள்ளூர்
இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை இலங்கைத் தூதுவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தினூடாக வழங்கியுள்ளார்.
ஈரானில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவளியினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தோஹாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியம் ஊடான சில விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதுடன், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் (Iron Dome) தயார் நிலையில் உள்ளன.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களைக் கண்டு தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. இஸ்ரேலிய இராணுவம் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது அவசர எச்சரிக்கைகள் (Siren) விடுக்கப்பட்டால், உடனடியாக உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் (Shelters) செல்லுங்கள். கடந்த 2025 ஜூன் மாதம் ஈரான் நடத்திய தாக்குதலின் போது இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படாததற்கு இவ்வாறான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியதே காரணமாகும்.
நாட்பட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்கள், தமது மருந்துகளை எப்போதும் தமக்கு அருகிலேயே கைவசம் வைத்திருக்கவும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது இணைய சேவை முடங்கி தொலைபேசிகள் செயலிழந்தாலோ, இலங்கையில் உள்ள உறவினர்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் எனத் தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திறந்தவெளிகளில் பணிபுரிவோர் எச்சரிக்கை ஒலி கேட்டவுடன் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும். வாகனங்களில் பயணிப்போர், வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலுள்ள பாதுகாப்பான மறைவிடத்தைத் தேடிச் செல்லவும்.
வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் தற்போதைய நிலைமை குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் (ஜனவரி 16, 17) தூதரகம் மூடப்பட்டிருக்கும். எனினும், ஏதேனும் எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டால் அவசர சேவைகளுக்காக தூதரகம் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






