Jino
Sep 3, 2025
உள்ளூர்
தொடரும் மன்னார் மக்களின் கோரிக்கை !
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று புதன்கிழமை (3) 32 நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பனங்கட்டுகொட்டு மற்றும் கீரி கிராம பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
- அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் 19 நாட்கள் முடிவடைகிறது.அரச தரப்பில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும்,தமது காரியங்களை மிகவும் சாதுரியமாக நிறைவேற்றுவதற்காக இந்த முயற்சி மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த செயல்பாடுகள் எமக்கு கவலையை தருகின்றது.மன்னார் செயலகம் இது வரைக்கும் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது தவிர்த்து வருவது கண்டனத்திற்குரிய,கவலைக்குரிய விடயமாகும்.
மன்னார் மாவட்டச் செயலகம் மும்முரமாக இந்த பணியில் இறங்கி மக்களின் வேண்டுகோளையும்,மக்களின் வேதனைகளையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.
ஆனால் மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டச் செயலகம் துரிதமாக செயல்பட வேண்டும்.
எங்களுடய உரிமைகளை நாங்கள் முழுமையாக அனுபவித்து வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி எமது மண் பறி போவதை தடுத்து நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட செயலகத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
நாட்டின் ஜனாதிபதி அவர்கள் எமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நடைமுறைப்படுத்தி வருகின்ற காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களையும் வெகு விரைவில் மன்னார் தீவில் இருந்து வெளியில் கொண்டு சென்று மக்களின் வாழ்விடங்கள் பாதுகாக்க வேண்டும் என்று மன்னார் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே மன்னார் தீவின் அமைக்கப்பட்ட 30 காற்றாலை கோபுரங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மக்களுக்கு உகந்த செயல்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும்,வாழ்வியலையும் பாதிக்கின்ற செயல்பாடுகள் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All