Rebecca
Nov 13, 2025
விளையாட்டு
பிற்போடப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகள்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையே இதற்கு காரணமாகும்.
இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையே இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதியும் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை குழாமின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் பணிக்குழாமினர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்தனர்.
இதனால் இன்று நடைபெறவிருந்த போட்டியை திட்டமிட்டவாறு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இரு தரப்பிலும் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து போட்டிகளை பிற்போடுவது குறித்தான தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலையடுத்து அங்கு தங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது போட்டி நாளை ராவல்பிண்டியில் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மீள நாட்டிற்கு அழைப்பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கவனம் செலுத்தியது. எனினும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் தொடரில் விளையாடவுள்ளனர்.
இதேவேளை இலங்கை அணியின் குறித்த தீர்மானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வரவேற்றுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








