Search

Rebecca

Nov 24, 2025

உள்ளூர்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான செயல்முனைவு ஆரம்பம்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு சர்வதேச பிரச்சாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது மனித உரிமை என்பதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் வன்முறையின்றி வாழ்வதற்கு உரிமை உண்டு என்றும், பிறரை வன்முறைக்கு உட்படுத்தாமல் வாழ்வது எமது பொறுப்பாகும் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாவதுடன், இது டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதற்கு சமாந்தரமாக இலங்கை முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போது தெரிவித்தார்.

வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது மனித உரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டு, 1991ஆம் ஆண்டிலிருந்து இது குறித்து உலகம் முழுவதும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.

டிஜிட்டல் வெளிக்குள் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழித்தல், அதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெறும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த வருடம் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் அங்கு வலியுறுத்தினார்.

அரசியல் ரீதியாக முரண்பட்ட கருத்துக்கள் ஒருவருக்கொருவர் காணப்பட்டாலும், மற்றவரின் தனிப்பட்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், அவர்கள் வன்முறைக்கு உள்ளாகும் வகையிலும் வெறுப்புப் பேச்சுகளை வெளியிடுவதை நிறுத்துவதை பாராளுமன்றத்திற்கு உள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp