Rebecca
Nov 23, 2025
உலகம்
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது!
பிரேசிலில் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆனால் இராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போல்சனரோவை முன்னதாகவே கைதுசெய்த பொலிஸார் பிரேசிலியாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








