
janani
May 1, 2026
உள்ளூர்
நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம் - சஜித்

1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தமது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று வியர்வை, கண்ணீர் மற்றும் உயிர் தியாகங்களின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரமும், மனிதாபிமான சேவை நிபந்தனைகளும் தொழிலாளர் கௌரவத்தின் அடித்தளமாகும்.
அந்த வரலாற்று வெற்றி இன்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு பெரும் சக்தியை அளித்துள்ளது.
இலங்கை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போதும், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் செய்த அர்ப்பணிப்புகளை நாம் எப்போதும் கௌரவத்துடன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இம்முறை மே தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் மற்றும் அநீதியான வரிக் கொள்கை காரணமாக வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துள்ளதுடன், இதனால் சாதாரண மக்களின் நுகர்வுத் திறன் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முதலீடுகளை ஊக்குவிப்பதாகவும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரிலும் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்தி, தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பையும் உரிமைகளையும் பறிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
உரிமைகளைக் கேட்டுப் போராடும் தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் ஒடுக்கி முன்னெடுக்கப்படும் இந்தப் பயணம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
பல நெருக்கடிகளுக்குள் வீழ்ந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின், உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு உரிய மரியாதையையும் சம வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு ஆட்சியின் மூலமே அது சாத்தியமாகும்.
ஒடுக்குமுறைக்கு எதிராக அத்தகையதொரு ஆட்சிக்காகவும் நீதிக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளியை ஒரு இயந்திரமாக அன்றி, நாட்டின் அபிவிருத்தியின் உண்மையான சரிசமமான பங்காளியாகக் கருதும் ஒரு 'சமூக ஜனநாயக' மனிதாபிமான பொருளாதார வேலைத்திட்டத்தின் தேவை இன்று எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற அறிவியல் ரீதியான ஊதிய முறையை அறிமுகப்படுத்தவும், தனியார் மற்றும் அரச துறை ஊழியர்களின் பாதுகாப்பை சர்வதேச தரத்திற்கு அமைய உறுதிப்படுத்தவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களின் பசியையும் வலியையும் உணர்ந்த, அவர்களின் உழைப்பிற்கு உரிய மரியாதையை வழங்குகின்ற ஒரு ஆட்சி நாட்டில் நிறுவப்பட வேண்டும். அதற்கான மக்கள் போராட்டத்திற்காக அனைத்து உழைக்கும் மக்களையும் கைகோர்க்குமாறு எதிர்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





