Dec 22, 2025
உள்ளூர்
நாவலப்பிட்டி பகுதியில் அதிவேக முச்சக்கரவண்டி கவிழ்ந்து பேருந்துடன் மோதியது: இருவர் காயம்

நாவலப்பிட்டி – போகஹவத்தை வழியாக செல்லும் கொத்மலை மகாவெலிகம வீதியில் அமைந்துள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) காலை சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும், அவருடன் பயணித்த மற்றுமொருவரும் முதலில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார், கொத்மலை மஹாவெலிகமவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த கொத்மலை டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன், அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






