
admin
May 1, 2026
உள்ளூர்
பாதுகாப்பான பணிச்சூழல் - நமது இலக்கு!

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும்.
1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலை நிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர்.
ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் குரல், அரசியல் ரீதியாகப் பலம்பெற்றது.
1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற தீர்க்கமான திருப்புமுனைகள், இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் "முன்னோடிகள்" உழைக்கும் மக்களே என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின.
அன்று தொட்டு இன்று வரை தோட்டத்துறை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களும் ஆற்றிய பங்களிப்பு, இன்று நாம் அனுபவிக்கும் பல தொழில்சார் உரிமைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது என்பதைப் பெருமையுடன் நினைவுகூருகின்றேன்.
1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் 8 மணித்தியால வேலை நேரக் கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க தொழிலாளர்கள் உள்ளிட்ட, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எமது மரியாதையை செலுத்தி, இம்முறையும் சர்வதேச தொழிலாளர் தினத்தை நாம் கௌரவத்துடன் கொண்டாடுகின்றோம்.
இந்த மே தினமானது, மக்கள் சக்தியால் உருவான அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படுவதனால் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது.
உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
அதற்கமைய, நடைமுறையிலுள்ள சேவைகளை விரிவுபடுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.
அத்தோடு, அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். அதற்கமைய, விசேட தேவையுடையோர் உட்பட அனைவருக்கும் கண்ணியமான தொழில்சார் வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.
ஊதியமற்ற உழைப்பை இனங்காணக்கூடிய மற்றும் அத்தகைய தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய தேசிய சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவுவது எமது அரசாங்கத்தின் முதன்மைக் கடமைகளுள் ஒன்றாகும்.
அனைத்து விதமான உழைப்பையும் மதிக்கின்ற, உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்குவதற்காக ஒன்றுபட்டு முன்னேறுவதன் முக்கியத்துவத்தை இந்த மே தினத்தில் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து உழைக்கும் மக்களின் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மூலம், நம் அனைவரதும் பொதுவான இலக்கான "வளமான நாடு — அழகான வாழ்க்கை" என்பதை மிக விரைவில் அடைவதற்குரிய வலிமை கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





