
puja
Aug 5, 2026
உள்ளூர்
பணம் தூய்தாக்கல் தடுப்பில் ஜனாதிபதி முக்கிய அறிவுரை!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இது குறித்த நிதியியல் தொடர்பான செயலணி (FATF) அறிமுகப்படுத்திய 40 பரிந்துரைகள் தொடர்பான தொழில்நுட்ப சாதக நிலை, அந்தப் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் காணப்படும் 11 உடனடிப் பலன்கள் ஊடாக மதிப்பிடப்படும் செயல்திறனும் இந்த பரஸ்பர மதிப்பீட்டின் போது மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதற்காக மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வானது இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பரிந்துரைகளை முறையாகச் செயற்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் குறித்த செயல்முறையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீட்டுச் செயல்முறைக்காக இலங்கை 2023 ஆம் ஆண்டு முதல் தயாராகி வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிக் காலக்கெடு விதிக்கப்பட்டு இந்த தயார் நிலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இது தேசிய மட்டத்திலான கணக்காய்வுச் செயல்முறையாவதுடன், இதனை ஆசிய பசுபிக் பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்கிறது. உள்நாட்டில் இந்தச் செயல்முறைக்காக சுமார் 25 அரச நிறுவனத் தரப்பினர்கள் தொடர்புபடுவதுடன், இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்தல் தொடர்பான செயலணியினால், தொடர்புடைய மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.
அதன்படி, இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டத்தை அமைச்சுகள் மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அதன்போது எழுந்துள்ள சிக்கல்களும் அவற்றை விரைவாகத் தீர்த்துக்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இணையவழி ஊடாக இடம்பெறும் சூதாட்டத்தை (Online Gambling) நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளின் தற்போதைய நிலையையும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.
மேலும், குற்றத்தின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான அதிகாரசபையை நிறுவுவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த அதிகாரசபையை மேலும் வினைத்திறனான மட்டத்தில் பேணிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். குறித்த அதிகாரசபையை நிறுவும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன்,பணிக் குழாமை இணைத்துக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள், சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, சட்ட வரைஞர் திணைக்களம் உட்பட தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். I NEED CAPTIONS
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





