Search

admin

Jun 19, 2026

உள்ளூர்

இறக்குமதியாளர்களுக்கு புதிய விதிகள்!

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் சிறப்புப் பரிவர்த்தனை எண் ஒன்று வழங்கப்பட வேண்டும். 

அத்துடன், அந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் பற்றிய விபரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவுத் திகதி, தற்காலிக விலைப்பட்டியல் எண் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கிகள் மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். 

மேலும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளராகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு, வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த புதிய உத்தரவுகள் இன்று (19) முதல் நடைமுறைக்கு வருகின்றன. 

இந்த நடவடிக்கையின் மூலம் இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதை முறையாகக் கண்காணிக்கவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All