
janani
Apr 28, 2026
உள்ளூர்
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமானது.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறை பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியமான காரணியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சிறு அளவிலான விவசாய முயற்சி கூட்டாண்மைத் திட்டத்தின் (SAPP) கீழ், கிராமப்புற இளைஞர், யுவதிகளை விவசாய வர்த்தக முயற்சிகளில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "சப்" (SAPP) தேசிய இளைஞர் விவசாய-வணிகக் கண்காட்சி மற்றும் B2B வர்த்தகத் தொடர்புகள் மாநாட்டில் இன்று (28) காலை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) வளாகத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமையை பாராட்டுகிறேன். நாட்டின் விவசாயத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் நீங்கள் அனைவரும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். உங்களைப் போன்ற திறமையான விவசாய முயற்சியாளர்களைக் காண்பது பெருமைக்குரியது.
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பாதுகாப்பு பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. "உற்பத்தி செய் மற்றும் விற்பனை செய்" (Grow and Sell) போன்ற எண்ணக்கருக்கள் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
கொவிட் நெருக்கடி காலத்திலும் சரி, தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் சூழலிலும் சரி, ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லையெனில் அதன் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உள்ளாகும். குறிப்பாக, தலைவர்களின் ஒரு சிறிய தீர்மானத்தினால் கூட விநியோகச் சங்கிலி (Supply Chain) தடைப்பட வாய்ப்புள்ளது.
காலநிலை மாற்றங்களினால் விவசாயத் துறைக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை முன்கூட்டியே கணிக்க முடியாத சந்தர்ப்பங்களில் விவசாயம் பெரும் சவாலுக்கு உள்ளாகிறது.
இத்தகைய பின்னணியில், விவசாய முயற்சியாளர்களாகிய உங்களின் பணி என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கும் நீங்கள் பங்களிக்கிறீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது உங்களுக்கன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமானது
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





