Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

"தீர்மானங்கள் வெறும் பேச்சோடு நிற்கக்கூடாது" மட்டக்களப்பு அபிவிருத்திக் கூட்டத்தில் சாணக்கியன்

இன்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான: இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் முன்னேற்றம் எதுவும் இல்லாதமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வெறும் நேரத்தை வீணடிக்கும் நிகழ்வுகளாக மாறிவரக் கூடாது. இக்கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வர வேண்டும். மக்களின் பிரச்சினைகள் குறித்து மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கு செயற்பாட்டு ரீதியான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

மயிலத்தமடு – மாதவனை பகுதிகளில் இடம்பெற்று வரும் மேய்ச்சல் நில விடுவிப்பு பிரச்சினை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் மீண்டும் கவனம் செலுத்தினார்.

இவ்விடயத்தில், மகாவலி அதிகார சபை மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட காணிகளை உரிய முறையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கடந்த பல கூட்டங்களிலும் இவ்விடயம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதமை கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நெல் கல் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக மத வழிபாட்டு தலங்கள் மற்றும் மத அடையாளப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் தனது கண்டனத்தையும் கவலையையும் பதிவு செய்தார்.

இவ்வாறான நில ஆக்கிரமிப்பு மற்றும் அடையாள மாற்ற முயற்சிகள் தொடருமானால், அதற்கு எதிராக ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All