Search

Rebecca

Dec 31, 2025

உள்ளூர்

மொட்டு, திசைகாட்டி கொல்லும் விஷம் : இம்ரான் எம்.பி சாடல்

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம் என்றால் திசைகாட்டி அரசாங்கம் மெல்லக் கொல்லும் விஷமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கோட்டபாய ராஜபக்சவின் தலைமையிலான மொட்டு அரசாங்க காலத்தில் முஸ்லிம்கள் நேரடியாக குறிவைத்து தாக்கப்பட்டனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலையிலான திசைகாட்டி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல குறிவைக்கப்படுகிறார்கள். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்து சிந்திக்க வேண்டும்

கோட்டபாய நமக்கு செய்த அநியாயங்களை நாம் இன்னும் மறக்கவில்லை. அவை நம்மை நேரடியாக குறிவைத்து செய்யப்பட்டவையாகும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான திசை காட்டி அரசாங்கம் நம்மை மெல்ல மெல்ல தாக்கி வருகின்றது.

இலங்கையில் இதற்கு முந்திய சகல அமைச்சரவையிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த அரசாங்கம் வந்தவுடனேயே அதனை இல்லாமல் செய்தது. அதுபோல இந்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுக்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டது.

தற்போது முஸ்லிம் கலாசாரத் திணைக்கள கட்டிடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை ஜித்தா கொன்சுலர் பதவியிலிருந்து முஸ்லிம் பிரதித்துவம் அகற்றப்படவுள்ளது.

ஏன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இப்படி அநீதிகளை செய்து வருகின்றது என்று பல சமூக ஆர்வலர்கள் என்னோடு கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர்.

இந்தச் செயற்பாடுகளின் விளைவுகள் எதிர்காலத்தில் நமது சமூகத்திற்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இதனை நியாயமாக சிந்தனையில் எடுத்துப் பார்ப்போர் இதன் விளைவுகளை புரிந்து கொள்வர்.

இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளின் பின்புலத்தில் யூதர்களின் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அரசின் அண்மைய நகர்வுகள் குறித்து அவதானிக்கும் போது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

எனவே திசைகாட்டிக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அநீதிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது முடியாவிட்டால் கண்மூடித்தனமாக அரசுக்கு முட்டுக் கொடுப்பதை விட்டு அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கி அடுத்து வரும் தேர்தல்களில் அதனைப் பிரதிபலிக்க வேண்டும்.

எதிர்கால சமூகத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் அரசின் இந்த நகர்வுகளுக்கு தொடர்ந்து கண்மூடித்தனமாக முட்டுக் கொடுப்போர் அதன் பின் விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All