Search

admin

May 10, 2026

உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் போது, தமக்குக் கிடைத்த 02 மில்லியன் டொலர்களில் 20 மில்லியன் ரூபாவை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமது கட்சிக்காரரை (கபில சந்திரசேன) அச்சுறுத்தி இவ்வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All