Search

Rebecca

Feb 27, 2026

உள்ளூர்

மட்டு.முனைக்காடு கிராமத்திற்குள் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை வேளையில் முனைக்காடு கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென புகுந்த காட்டு யானை, அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.

இதன்போது, அதிகாலை வேளையில் தங்களது வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்களை இலக்கு வைத்து யானை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தக் கோரத் தாக்குதலில் முனைக்காடு மாரியம்மன் ஆலய வீதியை சேர்ந்த 75 வயது பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேநேரம் இன்றைய தினம் காட்டுயானையின் தாக்குதல்கள் காரணமாக வீடுகள்,மதில்களும் சேதமடைந்துள்ளதுடன் பயிர்களும் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் புகுவதால் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

யானைகளின் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All