Search

Rebecca

Dec 27, 2025

உள்ளூர்

வவுனியா - கோதாண்டர் நொச்சிக்குளம் புனரமைப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி

புயல் மற்றும மழை காரணமாக உடைப்பெடுத்த வவுனியா, கோதாண்டார் நொச்சிக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த குளத்தின் புனரமைப்பு தொடர்பில் அவர் நேற்று கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வவுனியாவில் பல குளங்கள் உடைப்பெடுத்தன. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இராணுவத்தினர் மற்றும் கமக்கார அமைப்பினர் இணைந்து பல குளங்களின் உடைப்பு பகுதியை சீர் செய்திருந்தனர்.

இருப்பினும், வவுனியா கோதாண்டர் நொச்சிக்குளம் பெரியளவில் உடைப்பெடுத்திருந்தது.

இதனால் அதன் கீழ் உள்ள விவசாய நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் பாதிப்படையக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. சிறுபோகம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையிவ் விவசாய கால்நடை பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன மற்றும் நான் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலமைகளை அவதானித்ததுடன், அப் பகுதி விவசாயிகளுடனும் கலந்துரையாடியிருந்தோம்.

குளத்தின் அணைக்கட்டை தற்காலிகமாக உடனடியாக திருத்தி தந்தால் இருக்கும் நீரை பாதுகாத்து சிறுபோகம் செயய முடியும் என விவசாயிகள் கோரிக்கை விட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரின் பங்களிப்புடன், கமக்கார அமைப்பினர், கிராம மக்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இணைந்து குறித்த குளத்தை புனரமைத்துள்ளனர்.

ஏனைய குளங்களையும் புனரமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல குளங்களும் இராணுவத்தினரின் உதவியுடன் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All