Search

Rebecca

Jan 24, 2026

உள்ளூர்

கோட்டபாய அரசாங்கம் விவசாயத்தை குழப்பியதால் கவிழ்ந்தது! இரா.சாணக்கியன்

கோட்டபாய அரசாங்கம் விவசாயத்தை குழப்பியதால் கவிழ்ந்தது தற்போதைய அரசாங்கம் கல்வியிலும் இனவாதத்தை தூண்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையின் போது உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதப் போக்கில் செயல்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த அரசாங்கங்களைப் போலவே இனவாத அரசாங்கமாகவே செயற்படுகிறது என்பதை பல தடவைகள் நான் சுட்டிக்காட்டியுள்ளேன். அதற்கான அண்மைய எடுத்துக்காட்டாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை நியமனங்களை எடுத்துக்கொள்ளலாம்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் எட்டு தமிழர்கள், ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சிங்கள உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர், ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அந்த அமைப்பு ஐந்து தமிழர்கள், மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் ஏழு சிங்கள உறுப்பினர்களாக மாற்றப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சரை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பாக தாம் கவனம் செலுத்தியதாகவும், அதற்கு பதிலளித்த அமைச்சர் “இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகங்களே” என தெரிவித்தார்

ரஜரட்ட, களனி, றுஹுணு போன்ற பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் தமிழர்களைப் பெரும்பான்மையாக நியமித்து காட்டுங்கள். அதன் பின்னர் இலங்கையில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் யாரும் இருக்கலாம் என்பதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.

மேலும் கல்வி மறுசீரமைப்பிலும் இந்த அரசாங்கம் இனவாதப் போக்கை வெளிப்படுத்தி வருகின்றது, வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் நீக்கப்படுள்ளது.

இவ்வாறு கல்வி மறுசீரமைப்பின் பெயரில் இனவாத நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால், கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானமான முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

அத்துடன் ஜனாதிபதியின் தற்போதைய யாழ்ப்பாண விஜயம் தொடர்பான அவர் கூறிய சில இன நல்லிணக்கம் மற்றும் இன முரண்பாடுகளின் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் எனது உரை அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All