Search

admin

Feb 6, 2026

உள்ளூர்

பாடசாலை மாணவியை மிக மோசமாக தாக்கிய ஆசிரியர்! நானுஓயாவில் பரபரப்பு

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. 

தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில் : 

"குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார். 

பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது. 

மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All